Monday, May 16, 2011

பொதிகள்

அலை மோதும் நினைவுகளில் தேங்கிக்கிடக்கின்றதோ
உனக்கான என் கவிதாஞ்சலிகள்...
மிச்சமிருக்கும் அத்தனையும் வெற்றுத் தாள்களாய் போய்விடட்டும்..
ஒற்றைபுள்ளிகளில் சேதிகள் கேட்கின்றேன்...
அவிழும் முடிச்சுகளில் நிறைந்திருக்கின்றது காதல்...

படிநிலைகளை சில நேரங்களில் ஒரே பாய்ச்சலில் கடக்கின்றேன்..
மெத்தென விழும் அடிகளில் தெரிக்கின்றன பஞ்சு பொதிகள்..
நாசியில் ஏறும் துகள்களில் வாசம் தேடுகின்றேன்...
சில, காதோரம் வந்து கவனமாய் திரும்பிச்செல்கின்றது...

மின்மினிகள் நிலைகொள்ளாமல் கண்சிமிட்டுகின்றன
அங்கும் காதல் கதைகள் கதைக்கப்படுமோ!
ஒன்று மட்டும் ஓடித்திரிகின்றதே கண்சிமிட்டாமல்
அது ஆணா? பெண்ணா?
ஆண் என்றால் சுலபம், பெண் என்றால்...... விடை காணாக் கேள்விதான்.

Sunday, May 15, 2011

மிச்சம் ஏதுமிருப்பின்

நிழல் தேடி அலைகின்றது
எதிர்வரும் வரைகோடுகளில்
எனக்கான எல்லைகள் குறிக்கப்படக்கூடும்..

மெதுவாகவே நகருகின்றன பொழுதுகள்..
நேற்றைய வெக்கையோடு
இன்றைய வெக்கையும் சேர்ந்துகொண்டது..

திசைமாறிவிட்ட காற்றைடைத்த பாலிதீன் பைகள்
எதை நோக்கி பறக்கின்றதோ!!!
எதன் இலக்குகலிளோ சிக்கிக்கொள்ளக்கூடும்...

சட்டை பொத்தான்களில் தன்னை மறைத்துக்கொள்ளப்பார்க்கின்றது..
உள்ளிருக்கும் அதனதன் ஆசைகளை...
குளியலரையில் கரைந்துவிடக்கூடும்..

மிச்சம் ஏதுமிருப்பின் பின்னால் வரட்டும்