இரவு மணி ஒன்பது கூட்டம் குறைந்தபாடில்லை. எனக்கு பெரிய
அதிர்ச்சியாக இருந்தது. நாளை தீபாவளி இரவு 9 மணிக்குப் பின்னும்
சாரை சாரையாய் மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை தீபாவளிக்கு முந்திய இரவு
எப்படியிருக்குமென்று.
நேரம் ஆக ஆக கடைக்கு வரும் மக்களின் நிறம் மாறத்தொடங்கியது. துணிகளின் விலையும் மாறத் தொடங்கியது. பெரும்பாலனவர்கள் இளைஞர்கள், நாள் முழுவதும் உடல் வருந்த உழைக்கும் மக்கள். இதை யாரும் சொல்லாமலே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.எத்தனையோ சினிமாக்களில்
நாயகன் நாளைய பண்டிகைக்கு அதற்கு முந்தைய நாள் இரவில் தனக்கு கிடைத்த பணத்தில் குழந்தைக்கும், மனைவிக்கும் துணி வாங்கிவிட்டு
தனக்கென்று ஒன்றும் வாங்காமல் செல்வது போன்ற காட்சிகள் வரும். அந்த நிஜத்தினை நேரில் கண்டேன். . காலையிலிருந்து நின்று கொண்டிருப்பதால்
கால்கள் வலிக்கத்தொடங்கியது. வலியினை உணரும் போதெல்லாம் என் தந்தையின் நினைவும் வந்து சென்றது.
பல வருடங்களாக உழைத்துக்கொண்டிருக்கும் தந்தைக்கும், மற்றவர்களுக்கும் இப்படித்தானே வலித்திருக்கும்.
மணி இரவு பதினொன்று. காலகளில் வீக்கம் தெரிந்தது. முதுகிலும் வலியினை உணர்ந்தேன். என் முன்னே துணிகள் குவிந்து கிடந்தன. கூட்டம் அதிகமானதால் வருபவர்களை முழுமையாக
கவனிக்கமுடியவில்லை. சிலர் பொறுமை காத்தனர், சிலர் பொறுமை இழந்து தன்னைக் கவனிக்கச் சொல்லிக்கொண்டிருந்தனர்,சிலர் வெளியே சென்றனர். எனக்கும் இந்த அனுவம் இருந்திருக்கின்றது. அது இயல்பு தான் எனினும், அங்கே நிற்கும் பொழுதுதான் அது புரிந்தது.
அவருக்கு நாற்பது வயதிருக்கக்கூடும்.
கிளிசல்களுடன்அழுக்கேரிய சட்டையும் லுங்கியும் அணிந்திருந்தார்.
கூட்டத்துடன் நின்றிருந்தாலும்அவரை கவனத்திலேயே வைத்திருந்தேன்.
பேண்ட்களை எடுப்பதும், விலையினைப்பார்ப்பதும் மீண்டும் வைப்பதும் அதே போன்று சட்டைகளை எடுப்பதும் வைப்பதும். அவரை அழைத்தேன், என்ன வேண்டும்என்று கேட்டபடியே உள்ளதிலேயே விலை குறைவான
துணிகளாக எடுத்துக் காட்டினேன். அவருக்குப் பிடித்திருந்தாலும் இயலாமை அவர் முகத்தில் தெரிந்தது. மிகுந்த தயக்கத்துடன் ஒன்றையெடுத்து 100 ரூபாய்க்கு கிடைக்குமா என்று கேட்டார். அதன் மேல் 225 ரூபாய்க்கு விலை ஒட்டப்பட்டிருந்தது. நான் 200 என்று கூறினேன். முதலாளியிடம் பேசுங்கள் என்று சொல்லி 175 க்கு ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பினேன். அவரும் அதற்கு மேல்
குறைக்கவில்லை. முகத்தில் நிறைவும், மகிழ்ச்சியும் தெரிந்தாலும் அதையும் தாண்டி ஏக்கமும் தெரிந்தது. சுருட்டி வைத்திருந்த காகிததிலிருந்து
ரூபாய்நோட்டுக்களை எடுத்து கொடுத்தார். அத்தனையும் பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள்.
இரவு 12 மணியினை தாண்டியிருந்தது. ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார். அந்தப் பையனின் முகம் வாடியிருந்ததைக் கவனித்தேன். கேட்டது கிடைக்காத ஏக்கம் தெரிந்தது. அவர் சாதாரன பேண்ட்களை பார்த்துக்கொண்டிருந்தார். அவனது கண்களோ ஜீன்ஸ் பேண்ட்களின் மேல் இருந்தது. தந்தையும் மகனும் எதிர் எதிர் மன நிலையில். அவன் விருப்பத்தினை அவரிடம் கூறினாலும் அவர் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவன் விருப்பத்தினை மீறி அவர் வாங்கிவிட்டார். அவர் வாங்கியது அங்கு இருந்த ஜீன்ஸ் பேண்ட்களை விட விலை அதிகமான ஒன்றானாலும் அவனுக்கு பிடிக்காதது. அவன் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. அழுகை மட்டும் இல்லை.
காலை நான்கு மணிக்குமேல் கூட்டம் குறையத்தொடங்கியது. என் கால்களும் முன்பை விட மிகப் பெரிதாக இருந்தன.
5 மணிக்கு மேல் யாரும் வரவில்லை. நண்பன் இருதய பிரச்சினை உடையவன். அவனால் நிற்க முடியவில்லை. உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டான். நானும் மற்றொரு நண்பனும் பேசிக்கொண்டிருந்தோம். முதலாளி வெளியே சென்றிருந்தார். அன்று நான் வாங்கப்போகும் சம்பளம் 500 மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன். என்னளவில் மிகக் கஷ்டப்பட்டு சம்பாரித்த இல்லை சம்பாதிக்கப்போகும் என் முதல் சம்பளம். ஒரு வாரக்காய்ச்சலில் தளர்ந்திருந்த என் உடல் அன்றைய 500 ரூபாய் என்ற இலக்கை நோக்கி அனைத்தையும் தாங்கிக்கொண்டது.
காலை 8 மணிக்கு முதலாளி வந்தார். நாங்களும் கிளம்புவதற்கு தயாரகயிருந்தோம். 500 ரூபாய் நோட்டுகளை எண்ணி தனியாக வைத்துவிட்டு 100 ரூபாய் நோட்டுகளை எண்ணி , ஒரு 50 தை சேர்த்து மொத்தமாக 1050 தை கொடுத்தார். விற்பனை எதிர்பார்த்த அளிவிற்கு இல்லையென்றும் அதனால் இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்றும் கூறினார். இரவு முழுவதும் மிகுந்த இரைச்சல், ஆராவாரங்களுடன் பேசிக்கொண்டிருந்த அந்த பகுதி வெறிச்சோடிக்கிடந்தது. எங்களை அழைத்து வந்திருந்த நண்பன்
பேசிப்பார்த்தான், அவருடையபேச்சில் அலட்சியமும்,
இடத்தை காலி செய் என்ற தொனியும் இருந்தது.
அவரிடம் வாக்குவாதம் செய்வதற்கோ, பிரச்சினைகள் செய்வதற்கோ எங்களிடம் சக்தியில்லை. வேறு வழியில்லாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு
பேருந்து நிறுத்தத்தினை நோக்கி நடக்கத்தொடங்கினோம். இன்று வரையிலும் அந்த 350 பது என் மனத்திற்கு 500 ஆகவே தெரிந்தாலும், என்னளவில் முதல் உழைப்பும், அந்த காகித நோட்டுகளும் மதிப்பிட
முடியாதவையாகவே இருக்கின்றன.
(காலையில் 800 ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டி விறகப்பட்ட ஒரு பேண்ட்
நடு இரவில் பாதிவிலைக்கும் சற்று அதிகமாக விற்கப்பட்டது.)